நாட்டுப் பாட்டு – VII 

பரீட்சை முடிந்தது கொண்டாட்டம்.

பாடசாலைக்கோ திண்டாட்டம்.

ஜெய  பேரிகை கொட்டடா கொட்டடா! – பின்னர் 

ஊரிலே தென்னையை வெட்டடா!

சோதனை செய்து முடித்தோம் – அதைத் 

துரிதமாய்க் கொண்டாடத் துடித்தோம் 

வேதனை மற்றோர்க்குச் செய்வதே எங்களின் 

வீரம் என்று மையை அடித்தோம் 

அடிதடி செய்து சிரித்தோம் – தெருவில் 

ஆளையாள் ஓடிப் பிடித்தோம்.

குடிகாரனும் சொல்லக் கூசிடும் சொற்களைக் 

குறுக்கும் மறுக்கும் எழுதி வைத்தோம்.

வகுப்பறை தன்னை உடைத்தோம் – பசு 

மாட்டினை நன்றாய்ப் புடைத்தோம்.

சகிக்கவொண்ணா நாற்றம் வீசும் பொருட்களைச் 

சாமியின் முன்பு படைத்தோம்.

கதிரையைத் தூக்கினோம் கட்டி – டீச்சர் 

கைப்பையைப் பாழ் செய்தோம் வெட்டி.

குதிரையாய் ஓடிய கோணேசனை நாங்கள் 

கும்பிட்டோம் கோயிலும் கட்டி.

ஆசானின் வாகனச் சில்லை – நாங்கள் 

ஆணியால் குத்தினோம், தொல்லை 

கூசாமல் பெண்களில் கூடப் படித்தோர்க்குக் 

கொடுத்தோமே, மீறினோம் எல்லை. 

பின்னலைப் பின்னின்று இழுத்தோம் – அவள் 

பின்னே திரும்பில் பழித்தோம்.

வன்னத்திலே உயர் வெள்ளை உடைகளில் 

வாரியே மையைத் தெளித்தோம்.

வாத்தியார் சைக்கிளின் சீட்டை – நாங்கள் 

வன்மத்தில் ஆக்கினோம் ஓட்டை.

“பார்த்தியா டோய்’ என்று கத்தியே வீதியில் 

பாடிக் கடந்தோம் அதிபர் வீட்டை.

சோதனை செய்தவர் நாங்கள் – அதில்,

சொறி, நாங்கள் பெயில் தானே, போங்கள்.

வேதனை மற்றோர்க்கு விளைப்பதல்லால், ஏதும் 

சாதனை செய்யாதோர் நாங்கள்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *